தமிழ்நாடு

குரோம்பேட்டை: திடீரென உள்வாங்கிய சாலை; நிலத்தடிநீரில் கழிவுநீர் கலப்பதால் மக்கள் வேதனை

நிவேதா ஜெகராஜா

சென்னை குரோம்பேட்டை நெமிலிசேரி பகுதியிலுள்ள அருள் முருகன் நந்தவனம் நகரில் திடீரென்று சாலை உள்வாங்கியதால், அந்த வழியாக சென்று கொண்டிருந்த கழிவுநீர் வாகனம் அப்படியே சாலைக்குள் சென்று விபத்துக்குள்ளானது.

பூமி உள்வாங்கிய அந்தப் பகுதி, சாலையின் பாதாள சாக்கடையுடன் தொடர்புடையதாக இருப்பதால் அதிலுள்ள குழாயிலும் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அருகிலுள்ள வீடுகளில் கழிவுநீர் சூழ்ந்துள்ளது. கழிவுநீர் சூழ்ந்துள்ள காரணத்தால் நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் நோய் பரவும் அபாயமும் எழுந்துள்ளது. இக்காரணங்களால் விஷ பூச்சிகள் வீட்டுக்குள் வருவதாக கூறி அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு முன்வைக்கின்றனர்.

கழிவுநீர் ஓடையில் கலக்கும் அசுத்த நீரை சுத்தம்செய்ய, அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளனர் குடியிருப்புவாசிகள். அதைத்தொடர்ந்து இதற்கான பணி தொடர்ந்து நடந்து வருகின்றன. பணி முறையாக நடக்கிறதா என்பதை அறிய தாம்பரம் அரசு அதிகாரிகள், பல்லாவரம் எம்எல்ஏ, அலுவலர்கள் உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டுள்ளனர். பணிகளை துரிதப்படுத்துமாறு மக்கள் அவர்களிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.