தமிழ்நாடு

கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட்டம்: ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

webteam

கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள். அருவியில் குளித்தும், பரிசல் சவாரி சென்றும் மகிழ்ந்தனர்.

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் அருவியில் ஆயில் மசாஜ் செய்து, அருவியில் குளிக்கவும், பரிசல் சவாரி செய்வதற்காக தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழையால், காவிரி ஆற்றில் நீர்வரத்து சீராக உள்ளது. இதனால் இன்று கிருஸ்துமஸ் மற்றும் ஞாயிறு விடுமுறையை கொண்டாடுவதற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர்.

இதையடுத்து ஒகேனக்கல் வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஆயில் மசாஜ் செய்தும், அருவியில் குளித்தும், பரிசல் பயணம் செய்தும், தொங்குப் பலத்தின் மீது நின்றும் பிரதான அருவி, 5 அருவியின் அழகை கண்டு ரசித்தனர். இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி, பரிசல் துறை உள்ளிட்ட இடங்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலை மோதியது.

இன்று கிறிஸ்துமஸ் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் குவிந்ததால், ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் களைகட்டியது. இதனால் சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பரிசல் ஓட்டிகள், மசாஜ் மற்றும் சமையல் தொழிலாளர்கள் உள்ளிட்ட வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.