தமிழ்நாடு

மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி யானை

மீண்டும் ஊருக்குள் வந்த சின்னத்தம்பி யானை

webteam

கோவையில் காடுகடத்தப்பட்டு டாப்சிலிப் வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி காட்டு யானை கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளில் தென்னந்தோப்புகளில் புகுந்தது. யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள பெரியதடாகம் ‌வனப்பகுதியில் விவசாய நிலங்களை சின்னதம்பி யானை சேதப்படுத்தி வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.  இதனையடுத்து அங்கு விரைந்த வனத்துறையினர், மருத்துவக் குழுவுடன் இணைந்து சின்னதம்பி யானைக்கு மயக்கஊசி செலுத்தி கும்கி யானை உதவியுடன் பிடித்தனர். 

பின்னர் யானையை வாகனத்தில் ஏற்றும் முயற்சியின்போது, பின்னால் இருந்து கும்கி யானை தள்ளியதில் அதன் தந்தங்கள் குத்தி சின்னதம்பிக்கு காயம் ஏற்பட்டது. மேலும் வாகனத்தில் மோதி அதன் ‌2 தந்தங்களும் உடைந்து சின்னதம்பி யானை அவதிப்பட்டது. 

இதனையடுத்து வாகனம் மூலம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உள்ள டாப்சிலிப் வனப்பகுதிக்கு சின்னதம்பி யானை கொண்டு வரப்பட்டது. காயமடைந்த சின்னதம்பி யானைக்கு மருத்துவ பரிசோ‌தனை நடத்தப்பட்டு காயம் ஏற்பட்ட பகுதிகளில் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர். 

இதைத்தொடர்ந்து டாப்சிலிப் வனப்பகுதியில் சின்னதம்பி யானையை வனத்துறையினர் விட்டனர். சின்னதம்பி யானையின் இருப்பிடத்தை அறிய அதன் உடலில் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தனர்.

இந்நிலையில், சின்னத்தம்பி காட்டு யானை கோட்டூர், அங்கலக்குறிச்சி சுற்றுப்பகுதிகளில் தென்னந்தோப்புகளில் புகுந்தது. யானையை விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.