தமிழ்நாடு

’கிணற்றில் பிணமாக மிதந்த பச்சிளம் குழந்தைகள்’ - மனநலம் பாதித்த பாட்டியால் நிகழ்ந்த துயரம்

webteam

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் கிணற்றில் தூக்கி வீசியதில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். 

கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாக துருகத்தில் வசித்து வருபவர் வள்ளி. இவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனச் சொல்லப்படுகிறது. இவரது மகள் கீர்த்தனாவுக்கும் நீலமங்கலம் குடிகாடு கிராமத்தைச் சேர்ந்த திருஞானசம்பந்தம் என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இவர்களுக்கு அமுதவல்லி(2), ரிஷிகா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.

இந்நிலையில் வழக்கம் போல் கீர்த்தனா இன்று காலை எழுந்த போது, அருகில் படுத்திருந்த குழந்தைகள் காணாமல் போனதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே தனது அம்மாவிடம் இது பற்றி கேட்க அவர் முன்னுக்குப் பிரணாக பேசியதாகத் தெரிகிறது.

இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் வள்ளியிடம் விசாரணை நடத்தினர். அப்போது வள்ளி இரண்டு குழந்தைகளையும் கிணற்றில் தூக்கி வீசி விட்டதாகக் கூறியுள்ளார். உடனடியாக காவல்துறையினரும், தீயணைப்பு துறையினரும் உதயமாம்பட்டு சாலையில் உள்ள கிணற்றில் தேடிப் பார்த்தபோது அங்கு இரண்டு குழந்தைகளையும் பிணமாக கிடந்தது தெரிய வந்தது.

இது தொடர்பாக மனநலம் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் வள்ளியிடம் காவலர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். மீட்கப் பட்ட குழந்தைகளின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.