தமிழ்நாடு

மணப்பாறை அரசு மருத்துவமனையில் சுஜித் உடல் - பிரேத பரிசோதனை நடைபெறுகிறது

மணப்பாறை அரசு மருத்துவமனையில் சுஜித் உடல் - பிரேத பரிசோதனை நடைபெறுகிறது

rajakannan

அழுகிய நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தை சுஜித்தின் உடல் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

திருச்சி மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித் உயிரிழந்துவிட்டான். 80 மணி நேரத்திற்கு மேலாக மேற்கொள்ளப்பட்டு வந்த மீட்பு பணிகள் இறுதியில் தோல்வியில் முடிந்துவிட்டன. குழந்தை இருந்த ஆழ்துளை கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து மருத்துவர்கள் சோதனை செய்ததில் உடல் அதிக அளவில் சிதைந்துவிட்டது தெரியவந்தது நிர்வாக ஆணையர் ராதாகிருஷ்ணன் இந்த தகவலை தெரிவித்தார்.

இதனையடுத்து, தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு குழுவினர் ஆழ்துளை கிணற்றில் சிக்கியிருந்த சுஜித்தின் உடலை மீட்டு வெளியே எடுத்தனர். பின்னர், அந்த உடல் ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. 

இந்நிலையில், சுஜித்தின் உடல் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படு வருகிறது. மருத்துவமனை வளாகத்திற்கு அமைச்சர்கள், அதிகாரிகள் வருகை தந்துள்ளனர். பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனைக்கு பின்னர் தான், குழந்தை உயிரிழந்த நேரம் குறித்த தகவல் தெரியவரும். 

இதனிடையே, மீட்பு பணிக்காக தோண்டப்பட்ட குழிகள் சிமெண்ட் கான்ங்கிரீட் மூலம் உடனடியாக மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு தெரிவித்தார். இதனிடையே, மணப்பாறை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.