தமிழ்நாடு

குழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதமானது ஆகாது- உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

webteam

குழந்தையை உரிமைகோரும் வழக்கில், குழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதமானது ஆகாது என உயர்நீதிமன்ற மதுரைகிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மனுதாரரை குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் மனுதாரர் உரிய நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெல்லையைச் சேர்ந்த ஜெயசித்ரா அமர்தநாயகம் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில், தனது மகனை அவரது தந்தை சட்டவிரோதமாக உடன் வைத்திருப்பதாகவும் மகனை மீட்டு ஆஜர்படுத்தக் கோரியும் வழக்கு ஒன்றினை தாக்குல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் நிஷா பானு மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது பேசிய நீதிபதிகள், " இந்த வழக்கை பொறுத்தவரை குழந்தை மூன்றாம் நபரின் வசம் இருப்பதாக மனுதாரர் குறிப்பிடுகிறார். ஆனால் அந்த மூன்றாம் நபர் குழந்தையின் தந்தையே. குழந்தை தந்தையிடம் இருப்பது சட்டவிரோதமானது ஆகாது. ஆகவே இந்த வழக்கை ஆட்கொணர்வு மனுவாக விசாரிக்க இயலாது. மனுதாரரை குழந்தையை பார்க்க அனுமதிக்கவில்லை என்றால் மனுதாரர் உரிய நீதிமன்றத்தை அணுகி தீர்வு பெறலாம் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.