தமிழ்நாடு

வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பலி - வீட்டின் அருகே விளையாடிய போது நிகழ்ந்த சோகம்

webteam

மதுரை பரவை அருகே தனியார் மில் வேன் சக்கரத்தில் சிக்கி 3 வயது சிறுவன் பரிதாபமாக பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் பரவை சத்தியமூர்த்திநகர் பகுதியை சேர்ந்த செந்தில்குமார்-ஈஸ்வரி தம்பதியினரின் 3 வயது மகன் பொன்ராம் வீட்டின் அருகே இன்று காலை விளையாடிக்கொண்டிருந்துள்ளான்.

அப்போது மதுரை விளாங்குடிப் பகுதியைச் சேர்ந்த தனியார் நிறுவன மில் வேன் நிறுவனத்தில் பணியாற்றும் பெண்களை மதுரையை சேர்ந்த சேக் அப்துல்லா (24) என்பவர் வேனில் அழைத்துச் சென்று கொண்டிருந்தார். வேனை ஒட்டி வந்தபோது எதிர்பாரதவிதமாக வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பொன்ராம் பரிதாபமாக உயிரிழந்தான்.

வேனின் சக்கரத்தில் சிக்கி சிறுவன் பலியானதைப் பார்த்த அப்பகுதி பொதுமக்கள், கூச்சலிட்டதும் தான் வேனின் ஓட்டுநர் சேக் அப்துல்லா வண்டியை நிறுத்தி பார்த்துள்ளார். அப்போதுதான்தான் நடந்த விபரீதம் புரிந்துள்ளது.

இதனிடையே சம்பவம் அறிந்து வந்த சமயநல்லூர் போலீசார், சிறுவனின் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேதப் பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அஜாக்கிரதையாக வேனை ஓட்டிய ஓட்டுநர் சேக் அப்துல்லாவை கைது செய்து சமயநல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.