ஆரம்ப சுகாதார நிலையம், பாளையம்புதூர்
ஆரம்ப சுகாதார நிலையம், பாளையம்புதூர் சே.விவேகானந்தன்
தமிழ்நாடு

மருத்துவ உதவி தேவைப்படும் போது கதவை பூட்டிக்கொண்டு உறங்கிய செவிலியர்! பரிதாபமாக பறிபோன குழந்தை உயிர்

PT WEB

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி வட்டாரத்தில் பாளையம்புதூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளுக்கு அவசர சிகிச்சை மற்றும் மகப்பேறு கர்ப்பிணி பெண்களுக்கு பரிசோதனைகள், பச்சிளம் குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

ஆரம்ப சுகாதார நிலையம், பாளையம்புதூர்

இந்நிலையில் கடந்த 28-ம் தேதி ஊத்துப்பள்ளம் பகுதியை சேர்ந்த விஜயகுமார் மனைவி ஆனந்தி பிரசவத்திற்காக பாளையம் புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அன்றைய தினம் அவருக்கு பெண் குழந்தை சுகபிரசவமாக பிறந்துள்ளது. தொடர்ந்து இரண்டு நாட்கள் மருத்துவமனையில் இருந்து விட்டு செல்லுமாறு மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில், சுகாதார நிலையத்திலேயே இருந்துள்ளனர்.

ஆரம்ப சுகாதார நிலையம், பாளையம்புதூர்

இதனைத்தொடர்ந்து நேற்று குழந்தைக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் சுமார் இரவு 11.30 மணி அளவில் குழந்தைக்கு அதிக அளவில் காய்ச்சல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பொழுது மருத்துவமனையில் பணியில் செவிலியர் ஜோதி மற்றும் உதவியாளர் ஒருவர் மட்டுமே இருந்துள்ளனர். குழந்தைக்கு காய்ச்சல் அதிகமான நிலையில், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நுழைவு வாயில் மற்றும் செவிலியர்களின் அறை உள்ளிட்டவற்றை உள்பக்கமாக பூட்டிவிட்டு தனி அறையில் சென்று தூங்கி விட்டதாக கூறப்படுகிறது.

பரிதாபமாக பறிபோன குழந்தை உயிர்!

நள்ளிரவில் குழந்தைக்கு உடல் பாதிப்பு ஏற்பட்டவுடன் செவிலியர்களை அழைக்க சென்றுள்ளனர். அப்பொழுது அறைகள் பூட்டபட்டிருந்ததால் எவ்வளவு கதவை தட்டியும், கூப்பிட்டு பார்த்தும் அவர்கள் அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் மருத்துவமனையின் வெளிக்கதவுகளும் பூட்டப்பட்டதால், மருத்துவமனையை விட்டு வெளியில் செல்ல முடியாமல் மருத்துவமனைக்குள்ளையே சிக்கித் தவித்துள்ளனர். தொடர்ந்து செவிலியர்களை அழைக்கும் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், சுமார் அதிகாலை 3.30 மணி அளவில் பச்சிளம் குழந்தை பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

ஆரம்ப சுகாதார நிலையம், பாளையம்புதூர்

அதனைத் தொடர்ந்து உறவினர்கள் இன்று காலை மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தொப்பூர் காவல் துறையினர் நேரில் வந்து உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்தனர். மேலும் சம்பந்தப்பட்ட செவிலியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்ததை அடுத்து, இறந்த குழந்தையை வாங்கிச் சென்றனர். இதனால் அரசு மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.