அரக்கோணம் அருகே பழைய பிரியாணியை சுட வைத்து கொடுத்ததால் அதனை சாப்பிட்ட 5 வயது சிறுமி உடல்நிலை பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.
வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த தண்டலம் புது காலனியில் சீனிவாசன், கனகா தம்பதியினர் வசித்து வருகின்றனர். உறவினர் குடும்பத்தில் நடந்த நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்ட பிரியாணி மீதமானதால், சீனிவாசனின் குடும்பத்தினர் அதனை குளிர்சாதன பெட்டியில் வைத்ததாக கூறப்படுகிறது.
மறுநாள் அந்த பிரியாணியை மீண்டும் சுட வைத்த அவர்கள், வீட்டில் உள்ள சிறுவர்களுக்கு சாப்பிடக் கொடுத்துள்ளனர். சுடவைத்த பிரியாணியை உட்கொண்ட,சீனிவாசனின் மகள் கோபிகா, உள்ளிட்ட 4 சிறுவர்களுக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. அரக்கோணம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், அதில் கோபிகா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.