தமிழ்நாடு

பதவியேற்பு விழா: இன்று மாலை குஜராத் செல்கிறார் ஓபிஎஸ் - மோடியை சந்திப்பாரா?

webteam

குஜராத் முதலமைச்சர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை குஜராத் செல்கிறார். இந்த பயணத்தில் பிரதமர் மோடியை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

குஜராத் சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில், மொத்தம் உள்ள 182 தொகுதிகளில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக வரலாற்று சாதனை படைத்தது. இதையடுத்து புதிய பாஜக எம்எல்ஏ.,க்கள் கூட்டம் காந்திநகரில் நேற்று நடந்தது. அதில் பூபேந்திர படேலை மீண்டும் குஜராத் முதல்வராக்க ஒருமனதாக ஒப்புதல் அளித்தனர்.

இந்நிலையில், குஜராத் மாநிலத்தின் முதல்வராக பூபேந்திர படேல் இரண்டாவது முறையாக நாளை பொறுப்பேற்கவுள்ளார். இதையடுத்து காந்திநகரில் நடைபெறும் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் பங்கேற்கவுள்ளனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை விமானம் மூலம் குஜராத் செல்கிறார்.

இதையடுத்து நாளை நடைபெறும் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதோடு பிரதமர் மோடி அல்லது அமித் ஷாவை சந்திப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே குஜராத் தேர்தல் வெற்றி தொடர்பாக பிரதமருக்கு ஓ.பன்னீர்செல்வம் எழுதிய கடிதத்தில், 'நம் கட்சிகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளை வளர்த்துக் கொள்வது மட்டுமின்றி, மக்கள் நலனுக்கான நம் முயற்சிகளை ஒருங்கிணைக்கவும், உங்களுடன் பணியாற்றுவதை எதிர்பார்க்கிறேன்'. தன் நட்பும் மற்றும் கட்சியின் ஆதரவு தொடரும் என்றும் உறுதி என ஓபிஎஸ் குறிப்பிட்டிருந்தார்