மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கான நீரை முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று நண்பகல் திறந்து வைத்தார். முதன்முறையாக சேலம் சென்ற அவர், அணையின் வலது கரையிலிருந்து காவிரி நீரை மலர்கள் தூவி வரவேற்றார். கர்நாடகா நீர்ப்பங்கீடு குறைவு, பருவமழை தட்டுப்பாடு காரணமாக, வழக்கமான ஜூன் 12 தேதியை விட இம்முறை நீர்திறப்பு தாமதமானது குறிப்பிடத்தக்கது.
டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு நீர் திறக்கப்பட்டது. முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாகச் சேலம் சென்ற முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், அணையின் வலது கரையிலிருந்து தண்ணீரைத் திறந்து வைத்தார்.
சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வந்தடைந்த முதலமைச்சர் விஜயை, அமைச்சர்கள் புஸ்ஸி ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் அதிகாரிகள் பூகொத்து கொடுத்துவரவேற்றனர்.
முதல்வர் விஜய் தீவட்டிப்பட்டி, தொப்பூர், மேச்சேரி வழியாகச் சாலை மார்க்கமாக மேட்டூர் நோக்கிச் சென்றநிலையில், 4,000 காவல்துறையினர் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனர். அப்பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டது.
இந்தசூழலில் 12 மணிக்கு முன்பாகவே பாசனத்திற்கான தண்ணீரை திறந்துவைத்த முதல்வர் விஜய், மலர்கள் தூவி காவிரி நீரை வரவேற்றார்.
93 ஆண்டு வரலாற்றில் மேட்டூர் அணையில் இருந்து 62ஆவது ஆண்டாக பாசனத்திற்கான நீர் திறப்பு தாமதம் செய்யப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12இல் திறக்கப்படும் நிலையில், இம்முறையும் தாமதமாக திறக்கப்பட்டது. கர்நாடகா உரிய நீர்ப்பங்கீட்டை வழங்காததாலும் பருவமழை குறைவாலும் நீர்த்திறப்பு தாமதமாகியுள்ளது.