தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார் - முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

kaleelrahman

வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார். சிறுபான்மையினர் வாக்கு வங்கி பாதிக்காத வகையில், முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார் என மதுரையில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.

மன்னர் திருமலை நாயக்கரின் 439-வது பிறந்த நாளை முன்னிட்டு மதுரை திருமலை நாயக்கர் மகாலில் உள்ள அவரது சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர். 'பாதுகாப்பு கருதியே குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார வாகன ஊர்திக்கு அனுமதி இல்லை என சொல்கிறார்கள்.

தமிழகத்தில் நடைபெறும் குடியரசு தின விழாவில் கூட அலங்கார வாகன அணிவகுப்பு இல்லை, திமுக அமைச்சரவையில் 6 அமைச்சர்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் இருந்தும் ஒருவர் கூட மன்னர் சிலைக்கு மரியாதை செலுத்த வரவில்லை.

தமிழக கலாச்சாரத்தை பிரதமர் பிரதிபலித்தது வருகிறார், வட மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் தமிழர் போல பிரதமர் நடந்து கொள்கிறார். தமிழகத்துக்கு எதிராக பிரதமர் நடத்து கொள்ளவில்லை. தமிழர்களின் வரலாற்றை மறைக்கும் வகையில் மத்திய அரசு நடந்து கொள்ளவில்லை.

தமிழர்களின் பணியை உலகுக்கு எடுத்துக் காட்டும் விதமாக இந்திய அரசு செயல்படுகிறது. தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு எந்தவொரு நிலைபாட்டையும் எடுக்காது என திண்ணமாக கூறுகிறேன்.

எந்தவொரு பிரதமரும் தமிழர்களின் கலாச்சாரம், பெருமையை உலகுக்கு சொன்னதில்லை. பிரதமர் மோடி தமிழர்களின் பெருமையை உலக அரங்கில் நிலை நிறுத்தி வருகிறார்.

பிரதமர் குறித்து கனிமொழி எந்த நிலைபாட்டில் கூறுகிறார் என தெரியவில்லை. சிறுபான்மையினரின் வாக்கு வங்கி பாதிக்காத வகையில் முதல்வர் ஸ்டாலின் பாஜகவுடன் ரகசிய உறவு வைத்துள்ளார். பிரதமர் ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை தந்துள்ளார்' என கூறினார்.