தமிழ்நாடு

வீரதீர செயல் புரிந்தவர்களுக்கு பதக்கம் வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

JustinDurai

குடியரசு தின விழாவில் 8 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.

குடியரசு தின விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் கொடியேற்றம் மற்றும் அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 8 பேருக்கு வீர தீர செயலுக்கான அண்ணா பதக்கம் வழங்கி, ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையையும் வழங்கி கவுரவித்தார். 

மழை வெள்ளத்தின்போது உயிருக்கு போராடிய நபரை தோளில் தூக்கிச் சென்ற கீழ்ப்பாக்கம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி, விழுப்புரத்தில் வெள்ளத்தில் சிக்கிய நபர்களை மீட்ட தீயணைப்பு வீரர் ராஜீவ்காந்தி, திருவொற்றியூரில் கட்டடம் இடிந்து விழுவதற்கு முன் அனைவரையும் எச்சரித்து வெளியேற்றிய தனியரசு ஆகியோருக்கு அண்ணா பதக்கம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார். 

மேலும், மதுரை அருகே விபத்தில் சிக்கியவர்களை மீட்ட கார் ஓட்டுநர் முத்துக்கிருஷ்ணன், கோவை வனக்கால்நடை உதவி மருத்துவர் அசோகன், திருச்சி மணப்பாறை அருகே நீரில் மூழ்கிய சிறுமியை காப்பாற்றிய சிறுவன் லோகித், திருப்பூரில் நீரில் மூழ்கிய 5 சிறுமிகளை காப்பாற்றிய சொக்கநாதன் மற்றும் சுதா ஆகியோருக்கும் அண்ணா பதக்கங்கள் வழங்கப்பட்டுள்ளன. மத நல்லிணக்கத்திற்கான கோட்டை அமீர் விருது முகமது ரஃபி-க்கு வழங்கப்பட்டது.