தமிழ்நாடு

உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரை

JustinDurai

உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை உணர்ந்து பணியாற்ற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுக்குழு உறுப்பினர் புழல் நாராயணனின் இல்லத் திருமணவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. பின்னர் சிறப்புரையாற்றிய முதலமைச்சர், தமிழ்நாட்டில் சீர்த்திருத்த திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், நூற்றுக்கு 99 சதவிகிதம் இந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். எனவே உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தங்களுடைய கடமையை மனதில் வைத்துக்கொண்டு பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

நம் மீது மக்களுக்கு எந்தளவிற்கு நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு இந்த வெற்றிதான் சாட்சியாக அமைந்துள்ளது என்றும் நமக்கு ஏதாவது ஒன்று என்றால் உடனே ஓடி வருபவர்கள் திமுகவினர் தான் என மக்கள் நினைப்பதால்தான் வெற்றிபெறச் செய்துள்ளனர் எனத் தெரிவித்தார். இந்த நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதையும் படிக்க: அம்மா உணவகங்களில் அகற்றப்பட்ட ஜெயலலிதா புகைப்படம்: ஆர்.பி. உதயகுமார் கண்டனம்