தமிழ்நாடு

"முன்மாதிரி கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் ஊக்கத்தொகை" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Sinekadhara

சாதி வேறுபாடுகள் இல்லாமல் முன்மாதிரியாக விளங்கும் கிராமங்களுக்கு ஊக்கத்தொகையாக அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ், ஆதிதிராவிடர் நலத்துறை தொடர்பான அறிவிப்புகளை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் உரிமைகளை சட்டபூர்வமாக பாதுகாக்கவும், அவர்களின் முக்கியமான பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், தமிழ்நாடு ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு ஒன்றை தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் உருவாக்க சட்டம் இயற்றப்படும் எனத் தெரிவித்தார். வன்கொடுமை சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை முறையாக உறுதி செய்வதற்கு ஏற்கனவே தற்போது செயல்பட்டு வரும் நீதிமன்றங்களுடன், கூடுதலாக 4 நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும் எனக் கூறினார்.

வழக்குகள் அதிகமாக உள்ள சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இந்த கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்துள்ளார். பல கிராமங்களில் சாதி வேறுபாடுகள் அற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளதாகவும், மற்றவர்களுக்கு முன்மாதிரியாக விளங்கும் இத்தகைய கிராமங்களுக்கு ஊக்கத்தொகையாக வளர்ச்சி பணிகளை செயல்படுத்த அரசு சார்பில் 10 லட்ச ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார்.