தமிழ்நாடு

காவலர்களும் மனிதர்கள் தானே... - முதலமைச்சர் பழனிசாமி

webteam

இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணி நேரம் நிற்கிறார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “சோதனையான இந்த நேரத்தில் பொதுமக்கள் நோயின் தீவிரத்தை உணர்ந்து கட்டுப்பாட்டோடு இருக்க வேண்டும். அரசு ஒரு உத்தரவு போடுகிறது என்றால் அது மக்கள் நலன் கருதி தான் என்பதை மக்கள் உணர வேண்டும். பொதுமக்கள் ஒவ்வொருவரும் தன்னுடைய கடமையை உணர்ந்து, நோயினுடைய தன்மையை, தாக்கத்தை உணர்ந்து, தடை உத்தரவை கடைபிடித்தால் நிச்சயம் கொரோனா தொற்றை தடுக்க முடியும்.

நோய் என்பது இயற்கையாக வருவது. யாரிடமும் சொல்லிவிட்டு நோய் வருவதில்லை. யாரும் நோயை வரவழைப்பதும் கிடையாது. ஆனால் நோய் வந்துவிட்டால் குணப்படுத்துவது அரசின் கடமை. ஏனெனில் ஒவ்வொருவருடைய உயிரும் அரசிற்கு மிக முக்கியம். இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8 மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே.

எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது. தமிழகத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 83,500. கடந்த 5ஆம் தேதி வரை ரொக்க நிவாரணம், 13,037 பேர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு ரொக்க நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்தும் வங்கிக் கணக்கு மூலமாக செலுத்தப்படுகிறது.

இந்த கடுமையான வெயிலிலும் காவலர்கள் ஒவ்வொருவரும் 8மணி நேரம் நிற்கிறார்கள். தொடர்ந்து 21நாட்கள் என்றால் அவர்களும் மனிதர்கள் தானே. எனவே மக்கள் மனசாட்சியோடு எண்ணி பார்த்து தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொண்டால், அவர்களுக்கும் நல்லது; குடும்பத்திற்கும் நல்லது; நாட்டிற்கும் நல்லது.

— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) April 6, 2020

கொரோனா சிகிச்சைக்காக கூடுதலாக 2,500 வென்டிலேட்டர்கள் வாங்க கொள்முதல் ஆணை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் நோய் சிகிச்சைக்கான மருந்துகளான காய்ச்சல் மருந்துகள், Antibiotic மருந்துகள் மற்றும் I.V திரவங்கள் தேவையான அளவிற்கு முழுமையாக கையிருப்பில் உள்ளன.” எனத் தெரிவித்துள்ளார்.