சென்னையின் 2ஆவது விமான நிலையத்தை செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் அல்லது திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே உள்ள மாநெல்லூர் பகுதியில் அமைக்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. பரந்தூர் விமான நிலைய திட்டம் ரத்தானதை அடுத்து மாநில பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற வகையில் புதிய விமான நிலையத்தை அமைக்க இடத்தைத் தேர்வு செய்யும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.
அதற்காக செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மாநெல்லூர் ஆகிய 2 இடங்கள் பரிசீலனையில் உள்ளதாகத் தெரிகிறது. இதில், செய்யூர் பகுதி புதுச்சேரி விமான நிலையத்திலிருந்து சுமார் 40 கிலோ மீட்டர் தொலைவிலும், மீனம்பாக்கத்தில் இருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. அதேபோல் ஆந்திர மாநில எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள மாநெல்லூர் சென்னையிலிருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவிலும், ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.
மாநெல்லூர் பகுதி ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளத்துக்கு மிக அருகில் இருப்பதால், வான்வழி தொடர்பான சில சவால்களும் உள்ளன. இருப்பினும் மாநெல்லூரில் சிப்காட் அமைக்க ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளதால் விமான நிலைய தேவைக்காக புதிதாக நிலம் கையகப்படுத்த தேவையில்லை எனக் கூறப்படுகிறது.