செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
கோடம்பாக்கத்தைச் சேர்ந்த பியூலா (55) என்பவர் அதே பகுதியில் கிறிஸ்துவ தேவாலயம் வைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், இவர் தனது தோழி குளோரி என்பவருடன் ஆவடியில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத்திற்கு இன்று மாலை காரில் சென்றுள்ளார். அப்போது பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் அருகே சென்று கொண்டிருந்தபோது கோயம்பேட்டில் இருந்து வேலூர் நோக்கி வந்த அரசு பேருந்து திடீரென காரின் பின்பகுதியில் மோதியுள்ளது.
இதில், காரின் பின்பகுதி நொருங்கியதில் காரில் பயணம் செய்த இரண்டு பெண்களுக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரையும் மீட்டு பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் வழியிலேயே பியூலா இறந்து விட்டதாக தெரிவித்தனர். உடன் வந்த குளோரி பலத்த காயங்களுடன் மேல் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த பியூலா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.