தமிழ்நாடு

சென்னை: ஊரை சுற்றிப்பார்க்க காரில் சென்ற ஐடி பெண் ஊழியருக்கு நேர்ந்த பரிதாபம்

webteam

பள்ளிகரணை ரேடியல் சாலையில் நிகழ்ந்த கார் விபத்தில் ஐ.டி. நிறுவன பெண் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பொள்ளாச்சியை சேர்ந்தவர் கிருத்திகா (23), இவர் ராஜீவ் காந்தி சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி அதே பகுதியில் இயங்கிவரும் ஐ.டி. நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், இன்று தன்னுடன் பணியாற்றும் அபிஷா (26), ஸ்ரீதர் (29), பங்கஜ் (18) ஆகியோருடன் வெளியில் சுற்றிப் பார்ப்பதற்காக காரில் புறப்பட்டுள்ளார். அப்போது கரை ஸ்ரீதர் ஓட்டிவந்துள்ளார்.

இந்நிலையில், துரைப்பாக்கம் - பல்லாவரம் இடையே பள்ளிகரணை ரேடியல் சாலையில் கார் சென்று கொண்டிருந்தபோது கட்டுப்பாட்டை இழந்து கார் சாலையோரம் உள்ள பாலத்தின் தடுப்பில் வேகமாக மோதியுள்ளது. அப்போது காரின் கதவு திறந்து கொண்டதால் பின்னால் அமர்ந்திருந்த கிருத்திகா கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற மூவரும் காயமடைந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்க வந்த பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு விபத்தில் உயிரிழந்த கிருத்திகாவின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.