தமிழ்நாடு

சென்னை: சந்தேகத்திற்கிடமான நபரை சோதனை செய்ததில் சிக்கிய அமெரிக்க டாலர்கள்

webteam

எழும்பூர் ரயில் நிலையத்தில் ரூ.65 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர்களை  ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நேற்று பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை காவலர் இளையராஜா சந்தேகத்திற்கிடமாக சுற்றிய நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளார். அப்போது அவரிடம் ரயிலில் பயணம் செய்வதற்கான டிக்கெட் இல்லாததால் அவர் வைத்திருந்த உடமைகளை சோதனை செய்துள்ளார். அதில் கட்டுக் கட்டாக அமெரிக்க டாலர்கள் இருந்தது தெரியவந்தது.

இதையடுத்து உடனடியாக எழும்பூர் ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவனேசன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர், திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த ஜமீல் அகமத் என்பதும், அவரிடம் உள்ள கைப்பையை சோதனை செய்ததில் ரூ. 65,44,000 இந்திய மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்ததும் தெரியவந்தது.

இது தொடர்பாக ரயில்வே பாதுகாப்பு படை ஆய்வாளர் சிவனேசன், ஜமீல் அகமத் மற்றும் அவர் வைத்திருந்த அமெரிக்க டாலர்களை அமலாக்கத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர்.