செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை அடுத்த ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், அம்பத்தூர் கொரட்டூர் ஆகிய பகுதிகளில் காலை முதலே விட்டு விட்டு கனமழை பெய்துதது. இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களில் மாநகராட்சி அதிகாரிகள் ராட்சத மோட்டார்கள் மூலமாக நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில், விஜயின், தமிழக வெற்றிக் கழகத்தினர் ஆவடி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளம் பாதித்த இடங்களில் வீடு வீடாகச் சென்று பொதுமக்களுக்கு இரவு உணவு வழங்கினர். மேலும் சிறிய தெருக்களில் இருப்பவர்களுக்கு லோடு வாகனத்தில் குடிநீர், இரவு உணவு அளித்து உதவி செய்தனர். ஆவடி நாகம்மை நகர் பகுதியில் மாவட்ட தலைவர் பாலமுருகன் தமிழக வெற்றிக் கழக தொண்டர்களுடன் சேர்ந்து உணவு பரிமாறினர்.
மழையால் பாதிக்கப்பட்ட இடங்களுக்கு முதல் ஆளாக சென்ற தமிழக வெற்றிக் கழகத்தினர், களத்திற்கு நேரடியாக வந்து உணவு, குடிநீர் வழங்கி வரும் செயல் நெகழ்சியை ஏற்படுத்தி உள்ளது. உணவு, உடை, குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளவும் பொதுமக்களிடம் தவெகவினர் அறிவுறுத்தி வருகின்றனர்.