தமிழ்நாடு

சென்னை: போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை

kaleelrahman

சென்னையில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை காவலர் குடியிருப்பில் வசித்து வருபவர் பாலாஜி (50). இவருக்கு சசிரேகா என்ற மனைவியும், தமிழ்செல்வன், பிரபு என்ற மகன்களும் உள்ளனர். இந்நிலையில் மயிலாப்பூர் காவல் நிலையத்தில் போக்குவரத்து சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்த இவர், நேற்று காலை பணிக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார். பின்பு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்றார்.

இந்நிலையில் இன்று காலை நீண்ட நேரமாகியும் பாலாஜி வெளியே வராததால் சந்தேகமடைந்த மகன்கள் கதவை தட்டி பார்த்தும் திறக்காததால் கதவை உடைத்தனர். அப்போது பாலாஜி மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மகன்கள் சைதாப்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக சைதாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், சர்க்கரை நோய் காரணமாக பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தினமும் பாலாஜி மது அருந்திவிட்டு குடும்பத்தினருடன் பிரச்னையில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தான் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது. தற்கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் இருக்கிறதா? என்று சைதாப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.