சென்னையில் மனைவி குடும்பத்தினர், டார்ச்சர் செய்வதாகக் கூறி வீடியோவில் வாக்குமூலம் அளித்து திமுக பிரமுகர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஜாம்பஜார் முகமது ஹுசைன் சந்தை சேர்ந்தவர் வித்திய குமார் (32). தி.மு.க 115 வது பகுதி இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்த இவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன் நிஷா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கடந்த 3 மாதங்களாக வித்திய குமாருக்கும் அவரது மனைவி நிஷாவிற்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், நேற்று வீட்டிலிருந்த வித்திய குமார் தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக ஜாம்பஜார் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வித்திய குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் இது குறித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், வித்திய குமாரின் செல்போனில் அவரால் எடுக்கப்பட்ட வீடியோ பதிவு ஒன்று கண்டறியப்பட்டது. அந்த பதிவில், தனது மனைவி நிஷா, அவரின் சகோதரி உஷா மற்றும் உஷாவின் கணவர் கண்ணன் ஆகியோர் தன்னை பல வகைகளில் துன்புறுத்தி வருவதாகவும், கணவரென்றும் பாராமல் நிஷா தன்னை அடிப்பதாகவும், அவரின் சகோதரி உள்ளிட்ட உறவினர்கள் தன்னை தகாத வார்த்தைகளால் பேசி அவமானப்படுத்துவதாகவும் வித்திய குமார் பேசியுள்ளார்.
அவர்களால் பட்ட துன்புறுத்தல்களை தாங்க முடியாமல் தற்போது தற்கொலை முடிவை மேற்கொள்வதாகவும், தனது சாவிற்கு மனைவி நிஷா, உஷா மற்றும் கண்ணன் ஆகிய மூவரும்தான் முழு காரணம் எனவும் அவர்களுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டும் எனவும் அவர் வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் இது குறித்து ஜாம்பஜார் போலீசார் வித்திய குமாரின் மனைவி நிஷா மற்றும் அவரின் உறவினர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தனது மகன் மனைவியால் பட்ட வேதனை தாளாமல் தான் இந்த முடிவை எடுத்துள்ளதாகவும், அவர்கள் அளித்த பொய்யான புகாரின் அடிப்படையில் தீர விசாரிக்காமல் திருவல்லிக்கேணி அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தனது மகனை அழைத்து மிரட்டியது தனது மகனின் வேதனையை மேலும் அதிகரித்துவிட்டதாகவும் தனது மகனின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வித்திய குமாரின் தந்தை மதன் தெரிவித்தார்.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)