தமிழ்நாடு

இயற்கை பூங்காவான தரமணி காவல்நிலையம் : குவியும் பாராட்டுகள்

webteam

சென்னை தரமணி காவல்நிலையத்தைச் சுற்றி பூங்கா அமைத்து பராமரித்துவரும் காவல் ஆய்வாளருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

தரமணி காவல்நிலையத்தில் எம்.எஸ்.பாஸ்கர் என்பவர் சட்டம் ஒழுங்கு ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார். பல்வேறு பிரச்னைகளினால் புகார் அளிக்கவரும் மக்களின் மன உளைச்சலைப் போக்க நினைத்த இவர், புது விதமாக சிந்திக்கத் தொடங்கினார். இதன் காரணமாக காவல்நிலையத்தைச் சுற்றி பசுமையான பூங்கா ஒன்றை அமைப்பதற்காக ஆய்வாளர் பாஸ்கர் திட்டமிட்டார். 

அதன்படி, செயற்கை புற்கள் மூலம் காவல்நிலைய வளாகத்தை பசுமையான சூழலுக்கு மாற்றியுள்ளார். இவரது முயற்சியில் பல வகையான மூலிகைச் செடிகள், பழம் தரும் மரங்கள், மலர் செடிகளுடன் கூடிய அழகிய பூங்கா ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. புகார் கொடுக்க காவல்நிலையம் வரும் மக்கள், பூங்காவின் பசுமையைக் காணும்போது மனஉளைச்சலில் இருந்து மீள முடியும் என பாஸ்கர் கூறியுள்ளார். இவரைப் போன்றே, மற்ற காவல்நிலைய ஆய்வாளர்களும், தங்களின் காவல்நிலையங்களை சுற்றி பசுமையான சூழலை உருவாக்க திட்டமிட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.