சென்னை, ஆவடி உள்ளிட்ட இடங்களில் சாலையோரம் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
வங்கக் கடலில் நிலைக் கொண்டுள்ள 'அசானி' புயல், நிலத்தை கடக்காமல் திசைமாறி கடலை நோக்கிச் செல்லும் என கணிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் நேற்று இரவு தொடங்கி தற்போது வரை பரவலாக மழை பெய்துள்ளது. தொடர்ந்து தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
நேற்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்த நிலையில், இரவு பத்து மணிக்கு மேல் சூறவாளியுடன் மழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று வீசியதால் தமிழ்நாட்டில் பல்வேறு கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. சேலம் மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.
இதில் சென்னையை பொறுத்தவரை கனமழை காரணமாக பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். அடையாறு, காந்திமண்டபம், கோட்டூர்புரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 30 நிமிடம் வரை தாமதமானதாக வாகன ஓட்டிகள் தகவல் தெரிவித்தனர்.