Police station pt desk
தமிழ்நாடு

சென்னை | தாய் உயிரிழந்த சோகத்தில் மகன் எடுத்த விபரீத முடிவு..!

ஆவடி அருகே நோயால் தாய் உயிரிழந்த நிலையில், மகன் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

ஆவடி அருகே திருமுல்லைவாயல், தென்றல் நகர் கிழக்கு, 2-ஆவது குறுக்கு தெருவை சேர்ந்தவர் வசந்தா (60). இவரது கணவர் ரத்தினவேலு பல ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர்களது மகன் சங்கர் (35). திருமணமாகாத இவர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் வசந்தா, மூச்சுத்திணறல் நோயால் அவதிப்பட்டு வந்த நிலையில், இவரது மகன் சங்கர் மருத்துவச் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த 21-ஆம் தேதி முதல் வசந்தா, சங்கர் ஆகியோர் வீட்டை விட்டு வெளியே வராத நிலையில், வசந்தா வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதையடுத்து அக்கம் பக்கத்தினர் திருமுல்லைவாயல் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வசந்தா உயிரிழந்த நிலையில் படுக்கையிலும், சங்கர் தூக்கிட்டும் தற்கொலை செய்து கொண்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் இரு சடலங்களையும் மீட்டு உடற்கூறு சோதனைக்காக கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து திருமுல்லைவாயல் காவல் நிலைய ஆய்வாளர் ஜார்ஜ் மில்லர் பொன்ராஜ் தலைமையில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருமுல்லைவாயலில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.