தமிழ்நாடு

சென்னை: பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு சாலையில் வெடித்துச் சிதறல்

kaleelrahman

மாங்காடு அருகே பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி விழுந்து வெடித்ததில் ரவுடி படுகாயமடைந்தார்.

மாங்காடு அடுத்த பரணிபுத்தூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மோட்டார் சைக்கிளில் 3 பேர் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் பையில் வைத்திருந்த பொருள் கீழே விழுந்து பலத்த சத்தத்துடன் வெடித்துச் சிதறியது. இந்த சத்தத்தை கேட்டதும் அங்கிருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில், சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேரும் அங்கிருந்து வேகமாக தப்பிச் சென்றனர். இதுகுறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சம்பவம் குறித்து விசாரித்தனர். அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்ததில் சத்தம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து மோட்டார் சைக்கிளில் சென்ற நபர்கள் யார் என விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிறிது தூரத்தில் காலில் பலத்த காயங்களுடன் ஒருவர் படுத்துக் கிடப்பதாக வந்த தகவலையடுத்து அங்கு சென்ற போலீசார், அவரிடம் விசாரித்தனர். அதில் அவர், ஐயப்பன்தாங்கலை சேர்ந்த வினோத்குமார் (27) என்பதும் சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் தனது நண்பர்களுடன் மோட்டார் சைக்கிளில் செல்லும் போது பேப்பர் பையில் எடுத்துச் சென்ற நாட்டு வெடிகுண்டு தவறி கீழே விழுந்து வெடித்ததில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இவருக்கு காயம் ஏற்பட்டதையடுத்து அவரது நண்பர்களும் அங்கிருந்து தப்பிச் சென்றது விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இவர்கள் யாரையாவது பழி தீர்க்க சதித்திட்டம் தீட்டி நாட்டு வெடிகுண்டை எடுத்துச் சென்றார்களா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர். மேலும் காயமடைந்த நபர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.