Accused with the gun CCTV footage
Accused with the gun CCTV footage pt desk
தமிழ்நாடு

சென்னை: பட்டப் பகலில் துப்பாக்கி முனையில் நகைக் கடையில் கொள்ளை – வெளியான சிசிடிவி காட்சிகள்!

webteam

செய்தியாளர்: ஆவடி நவீன்குமார்

ஆவடி அடுத்த முத்தாபேட்டை எல்லியம்மன் நகர் பகுதியில் வசித்து வருபவர் பிரகாஷ். இவர், இதே பகுதியில் கிருஷ்ணா என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், இன்று வழக்கம் போல நகைக் கடையை திறந்துள்ளார். மதிய வேளையில் நகைக் கடைக்கு வந்த நான்கு மர்ம நபர்கள் பிரகாஷிடம் நகைகளை கொடுக்கும்படி கேட்டுள்ளனர். பிரகாஷ் நகைகளை கொடுக்க மறுக்கவே துப்பாக்கியை காட்டி கை கால்களை கட்டி போட்டுவிட்டு லாக்கர் அறைக்கு கூட்டிச் சென்று தாங்கள் கொண்டு வந்த பையில் நகைகள், 5 லட்சம் ரூபாய் பணம், ஐ-போன் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு தயாராக இருந்த காரில் தப்பிச் சென்றுள்ளனர்.

prakash

இதுகுறித்து பிரகாஷ், முத்தா புதுப்பேட்டை காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே கொள்ளை சம்பவம் அரங்கேறிய நகைக் கடையில் ஆவடி மாநகர காவல் கூடுதல் ஆணையர் ராஜேந்திரன் துணை ஆணையர் அய்மான் ஜமால் உள்ளிட்ட அதிகாரிகள் நகைக்கடை உரிமையாளரிடம் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து கொள்ளை விவகாரம் குறித்து கண்டறிய ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கொள்ளையர்களை அடையாளம் காண முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கொள்ளைக்கு பயன்படுத்திய வாகனத்தின் எண் கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். கொள்ளையில் ஈடுபட்டது வட இந்தியர்கள் என நகைக் கடை உரிமையாளர் தெரிவித்த நிலையில், அதன் அடிப்படையில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Accused

இது குறித்து பேட்டி அளித்த கூடுதல் ஆணையர், தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. விரைவாக கொள்ளையர்கள் பிடிபடுவார்கள் என தெரிவித்தார். தற்போது கொள்ளையில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.