சென்னை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வரும் சூழலில், ஒரே நாளில் 8 இடங்களில் வழிப்பறி சம்பவங்கள் நடந்திருப்பது மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, தேனாம்பேட்டை சீதாம்பாள் காலனியில் உள்ள சாலையில் பெண் ஒருவர் நடந்து சென்றார். அப்பெண்ணை இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து வந்த 2 இளைஞர்கள், அவரது கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றனர். வழிப்பறிப்பின்போது கொள்ளையர்கள் பிடியில் சிக்கிய சாந்தா, சாலையில் தூக்கி வீசப்பட்டார். இந்தச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து புகார் அளிக்கப்படாத நிலையில், குற்றவாளிகளின் அடையாளம் மற்றும் வாகன பதிவெண்ணை வைத்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், ஐஸ் ஹவுஸ், கோட்டூர்புரம், பள்ளிக்கரணை, ஆதம்பாக்கம், திருமங்கலம், எழும்பூர் உள்ளிட்ட இடங்களில் சாலையில் நடந்து சென்ற பெண்களிடம் சுமார் 29 சவரன் தங்கச் சங்கிலிகள் பறிக்கப்பட்டுள்ளன.
இதேபோன்று ராயப்பேட்டையில் வழிப்பறி முயற்சி நடந்துள்ளது. சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமரா கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டுள்ள நிலையிலும், காவல்துறையிடம் சிக்குவோம் எனத் தெரிந்தும் இதுபோன்ற தொடர் வழிப்பறி சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.