தமிழ்நாடு

1918-க்கு பிறகு 4ஆவது முறை... சென்னையில் ஒரே மாதத்தில் 100 செ.மீ. மழை

webteam

சென்னையில் இந்த மாதத்தில் மட்டும் 100 சென்டி மீட்டருக்கும் அதிகமான அளவு மழை பதிவாகியுள்ளது. 1918-ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே மாதத்தில் மழை சதமடித்திருப்பது இது நான்காவது முறையாகும்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. சென்னையில் தொடக்கம் முதலே கனமழை பெய்து வருகிறது. நவம்பர் மாதத்தில் 27 நாட்களில் 1,003 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அதாவது 100 சென்டி மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்துள்ளது.

சென்னையில் 1918 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே மாதத்தில் 100 சென்டி மீட்டருக்கு மேல், மழை பதிவாகியிருப்பது இது நான்காவது முறையாகும். நவம்பர் மாதத்தில் மழைப்பொழிவு சதமடித்திருப்பது மூன்றாவது முறையாகும்.

இதற்கு முன், கடந்த 1918-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1,088 மில்லி மீட்டரும், 2005-ஆம் ஆண்டு அக்டோபரில் 1,078 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோல் 2015-ஆம் ஆண்டு நவம்பரில் 1,049 மில்லி மீட்டர் மழை பதிவாகியிருந்த நிலையில், தற்போது மீண்டும் 1000 மில்லி மீட்டரைக் கடந்து மழை பதிவாகி சென்னை மக்களை கதிகலங்க வைத்துள்ளது.