police
police file image
தமிழ்நாடு

‘போகிறேன் அம்மா..’ விடுப்பில் வீடுவந்த காவலர் எடுத்த விபரீத முடிவு.. விசாரணையில் சிக்கிய கடிதம்!

PT WEB

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஊஞ்சக்காடு பகுதியை சேர்ந்தவர் அன்புராஜ். 22 வயதான இவர், சென்னை ஆவடியில் உள்ள ஆயுதப்படை சிறப்பு காவல் பிரிவில் 2-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் 30ம் தேதி ஒரு மாதம் மருத்துவ விடுப்பில் வீட்டிற்கு வந்த அன்புராஜ், நேற்று வீட்டில் மயங்கிய நிலையில் பேச்சு மூச்சின்றி கிடந்துள்ளார். இதனை பார்த்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அன்புராஜை மீட்டு உடனடியாக அருகிலிருந்த தனியார் மருத்துவமனைக்கு அவரை கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், தற்கொலைக்கு முயன்று அன்புராஜின் உயிர் ஏற்கனவே பிரிந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், இறக்கும் முன் தன் அம்மாவுக்கு அன்புராஜ் எழுதிய கடிதத்தை போலீஸார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில், “போகிறேன் அம்மா, நான் இத்தனை நாள் வாழ்ந்ததே உனக்காகத்தான். எனக்கு என்ன ஆச்சுனு தெரியல. எனக்கு எந்த பிரச்சனையும் இல்ல. இத எப்படியும் யாராவது உங்கிட்ட படிச்சு காட்டுவாங்க. நான் யார்கிட்டையும் சொல்லாம போய்டலாம்னு நினைச்சேன். அப்புறம் எல்லாம் தப்பா பேச ஆரம்பிச்சுடுவாங்க.

தற்கொலை

என் மணமறிந்து யாருக்கும் நான் கெட்டது செஞ்சதுல்ல, என் தலைக்குள்ள ஏதோ ஓடிட்டே இருக்கு, என்னால கண்ட்ரோல் பண்ண முடியல. வெளியே எங்கேயும் போகமாட்டேன் ம்மா. கூடவேதான் இருப்பேன். அதுக்காகத்தான் வீட்டுக்கு வந்தேன்” என்று உருக்கமாக எழுதியுள்ளார் அன்புராஜ்.

மேலும் “ஒருவன் நல்லவன் என்பதற்கு அர்த்தம் அவன் இறந்த பின் அவனுக்காக சிந்தும் கண்ணீர் துளிகளால் மட்டுமே கண்டறியப்படுகிறது” என்றும் அன்புராஜ் எழுதிய நிலையில், இறப்புக்கு என்ன காரணம் என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.