காவலர் கிருஷ்ணமூர்த்தி
காவலர் கிருஷ்ணமூர்த்தி pt desk
தமிழ்நாடு

ஓய்வு பெற்ற காவல் ஆய்வாளருக்கு, வித்தியாசமாக கேக் செய்து அசத்திய மகள்!

webteam

கடந்த 1986 ஆம் ஆண்டு சென்னை மாநகர காவல் துறையில் காவலராக பணிக்கு சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. சிறப்பாக பணியாற்றிய இவர், தலைமை காவலர், உதவி ஆய்வாளர், ஆய்வாளர் என பதவி உயர்வு பெற்றார். இப்படி கடந்த 38 ஆண்டுகளாக காவல் துறையில் பணியாற்றி வந்த இவர், சிறு தண்டனை கூட பெறாமல் கடைசி வரை சிறந்த முறையில் பணியாற்றி கடந்த 31 ஆம் தேதியுடன் ஓய்வு பெற்றார்.

காவலர் கிருஷ்ணமூர்த்தி - பணி ஓய்வு கேக்

இவர் பணி ஓய்வு பெற்றதை அடுத்து, சக காவலர்கள் அம்பத்தூர் போக்குவரத்து காவல் நிலையத்தில் அவருக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடத்தினர். அதில், காவல்துறை உயர் அதிகாரிகள் முதல் காவலர்கள், சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

அப்போது தன் தந்தையின் 38 ஆண்டு காவல்துறை பணி நிறைவை கேக் வெட்டி கொண்டாட நினைத்து, வித்தியாசமான கேக் ஒன்றை போக்குவரத்து ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தியின் இளைய மகளான தீப நிவாஷினி ஏற்பாடு செய்திருந்தார். வித்தியாசமான இந்த கேக் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அந்த கேக்கில் மாநகர காவல் துறையின் இலச்சினை, பாதுகாப்பு விதி முறைகள், சாதனங்கள், துப்பாக்கி தோட்டாக்கள், பெல்ட், தொப்பி, லத்தி ஆகியவை இடம் பெற்றிருந்தன. இதைக் கண்ட உயர் அதிகாரிகள் அசந்து போயினர்.

காவலர் கிருஷ்ணமூர்த்தி

தனது தந்தை காவல்துறை பணியின் மீது கொண்ட பற்றையும் அன்பையும் வெளிப்படுத்தும் விதமாக இந்த கேக் இருக்க வேண்டும், அவர் இத்தருணத்தை மறக்கவேகூடாது என எண்ணிய அவரது மகள் வடிவமைத்த இந்த கேக்கை கண்டு தந்தை கிருஷ்ணமூர்த்தி மட்டுமின்றி அவரது உறவினர்கள் அனைவரும் நெகிழ்ச்சி அடைந்தனர்.