தமிழ்நாடு

“வாகனங்களில் அதிக ஒலி எழுப்பும் கருவியை வைக்கும் மெக்கானிக்கை பிடிங்க ” - சென்னை கமிஷனர்

நிவேதா ஜெகராஜா

அதிக சத்தத்தை எழுப்பும் கருவியை பைக்குகளில் பொருத்தும் மெக்கானிக் ஷாப்புகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.

கோடை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் ஒவ்வொரு வருடமும் கோடை காலத்தில் போக்குவரத்து பிரிவில் பணிபுரியும் காவலர்களுக்கு மோர் வழங்கப்பட்டு வருகிறது. இன்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் சென்னை வேப்பேரி, ஈ.வே.ரா பெரியார் சாலை - ஈ.வி.கே சம்பத் சாலை சிக்னல் சந்திப்பில் போக்குவரத்து காவல் துறையினருக்கு மோர் வழங்கி திட்டத்தை துவக்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் சென்னை ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இன்று முதல் அடுத்த 4 மாதங்களுக்கு காலை, மாலை இரண்டு வேளைகளில் போக்குவரத்து காவல்துறையினக்கு மோர் வழங்கப்பட உள்ளது. இதற்காக வருடந்தோறும் 30 லட்சம் ரூபாய் அரசு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோடைகாலத்தில் போக்குவரத்து காவல்துறைக்கு உடல் ரீதியான பிரச்னை ஏற்படாமல் தடுக்க மருத்துவ முகாம் நடத்த திட்டமிட்டுள்ளோம். சாலை விதிகள் மற்றும் போக்குவரத்து தொடர்பான சாலை மாற்ற திட்டங்களை அந்தந்த காவல் மாவட்டத்தின் போக்குவரத்து உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் வகுத்து கொள்ளும் முறையை கொண்டு வர திட்டமிட்டுள்ளோம்.

மேலும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது குடியிருப்பு வாங்கி தருவதாக மோசடி புகார் திருவொற்றியூர் காவல் நிலையத்திற்கு வந்துள்ளது. அந்த புகார் மீதான விசாரணை நடந்து வருகிறது. நில அபகரிப்பு வழக்கில் ஜெயக்குமாரின் மகள் மற்றும் மருமகன் தலைமறைவாக உள்ளனர்.

அதிவேகமாக வாகனத்தை இயக்குபவர்களை கண்டறிய 367 சந்திப்புகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தி கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம். அதிக சத்தம் எழுப்பக்கூடிய வாகனங்களை தயாரிக்கும் மெக்கானிக் ஷாப்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளோம்.

பள்ளி மாணவர்கள் வாகனங்கள் ஓட்டி செல்வதை பெற்றோர்கள் ஊக்குவிக்க கூடாது. பள்ளி மாணவர்கள் வாகனம் ஓட்டி சென்றால் அவர்களின் பள்ளியை கண்டறிந்து ஆசிரியர்கள் மூலம் சம்பந்தப்பட்ட மாணவரை அடையாளம் கண்டு உரிய நடவடிக்கை எடுக்க உள்ளோம். கொரோனா காலத்தின் போது பிரீத் அனலைசர் கருவி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. தற்போது பிரீத் அனலைசர் கருவி மூலமாக குடிபோதையில் வாகனம் ஓட்டுவோர் மீது 150 வழக்குகள் வரை பதிவு செய்யப்பட்டு வருகிறது.

லோன் ஆப் மோசடியை தடுக்க பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறோம். இணை ஆணையர் தலைமையில் 4 சைபர் காவல் நிலையங்கள் வர உள்ளோம்" என்று சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் கூறியுள்ளார்.