தமிழ்நாடு

தடியடிபட்ட இயக்குநர் களஞ்சியம்: நலம் விசாரித்த காவல் ஆணையர்

webteam

ஐபிஎல் போட்டிக்கு எதிராக போராடியபோது தடியடிபட்ட இயக்குநர் களஞ்சியத்தை, காவல் ஆணையர் விஸ்வநாதன் நேரில் நலம் விசாரித்தார்.

காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல போராட்டங்கள் தமிழகத்தில் நடைபெற்று வரும் போது, கவனத்தை திசை திருப்பும் வகையில் ஐபிஎல் போட்டியை சென்னையில் நடத்தக்கூடாது என பல அரசியல் கட்சினரும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தினர். அதையும் மீறி ஐபிஎல் போட்டி சென்னையில் நடத்தப்பட்டதால், அன்றைய தினம் போட்டி நடைபெற்ற சேப்பாக்கம் மைதானத்தை சுற்றி சீமான் உள்ளிட்ட பல அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தினர். 

இதுதவிர இயக்குநர் பாரதிராஜா, பாடலாசிரியர் வைரமுத்து, அமீர், வெற்றிமாறன், கவுதமன், களஞ்சியம் உள்ளிட்டோரும் போராட்டம் நடத்தினர். அப்போது போலீஸார் நடத்திய தடியடியில் களஞ்சியம், வெற்றிமாறன் உள்ளிட்டோர் காயமடைந்தனர். காயமடைந்த களஞ்சியம் சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில் அவரை சந்தித்து பேசிய காவல் ஆணையர் விஸ்வநாதன், மருத்துவர்களிடம் களஞ்சியத்தின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.