சமீபகாலங்களில் வீட்டு உபயோகத்திற்காக பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர்களைப் பெறுவதில் மக்கள் பல்வேறு சிக்கல்களைச் சந்தித்து வந்தனர். சிலிண்டர் புக் செய்வதில் சிக்கல், புக் செய்த பிறகும் 3 முதல் 4 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய நிலை என பல்வேறு பிரச்னைகள் இருந்தன. இதற்கிடையே, ஈரான் போர் பதற்றம் காரணமாக சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவானதால், சிலிண்டர் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில், சிலிண்டர் புக் செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் வீடு தேடி டெலிவரி செய்யும் புதிய திட்டத்தை இந்தியன் ஆயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிலிண்டரை யாரெல்லாம் பெறலாம்? எப்படி பெறுவது என்பதை பார்க்கலாம். இந்தியாவில் சமையல் எரிவாயு விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான இந்தியன் ஆயில் நிறுவனம், கடந்த ஜூலை மாதம் Indane XTRALITE என்ற புதிய வகை சிலிண்டரை அறிமுகப்படுத்தியது. இந்த XTRALITE சிலிண்டர் 10 கிலோ எடை கொண்டது.
வழக்கமாக பயன்படுத்தப்படும் உலோக சிலிண்டர்களுக்கு மாற்றாக, ஒளி ஊடுருவக்கூடிய வகையில் சிறப்பு வகை பிளாஸ்டிக் மற்றும் ஃபைபர் பொருட்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் சிலிண்டரில் எவ்வளவு எரிவாயு மீதமுள்ளது என்பதையும் ஒளி ஊடுருவல் மூலம் வெளிப்புறமாகவே தெரிந்துகொள்ள முடியும். ஏற்கெனவே Indane இணைப்பு பெற்றுள்ள வாடிக்கையாளர்கள், அதே இணைப்பின் கீழ் மானியம் இல்லாத பிரிவில் 10 கிலோ XTRALITE சிலிண்டரைப் பெறலாம். இதற்காக ரூ.3,000 பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்த வேண்டும். ஏற்கெனவே பாதுகாப்பு வைப்புத்தொகை செலுத்தியிருந்தால், மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தி XTRALITE சிலிண்டரைப் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடக்கத்தில் கோயம்புத்தூர் உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் தற்போது சென்னை, செங்கல்பட்டு, திருச்சி, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கும், புதுச்சேரிக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள், 10 கிலோ எடை கொண்ட Indane XTRALITE சிலிண்டரை புக் செய்த வெறும் 4 மணி நேரத்திற்குள் பெற்றுக்கொள்ள முடியும். இந்த திட்டம் வரும் அக்டோபர் மாத இறுதிக்குள் நாட்டின் மேலும் பல பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர் - ராஜ்குமார்.ர