செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை அடுத்த பெரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் செந்தில். கடந்த இரு தினங்களுக்கு முன்பு தனது மனைவியுடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு போக்குவரத்து காவல்துறை அனுப்பும் குறுந்தகவல் போன்று ஒரு மெசேஜ் செந்தில் செல்போன் எண்ணிற்கு வந்துள்ளது.
இதையடுத்து அந்த மெசேஜில் இருந்த லிங்கை கிளிக் செய்து என்ன அபராதம் என பார்க்க முயன்றுள்ளார். அப்போது செல்போன் ஹேங் ஆகி விட்டது, அதன் பின் செந்தில் செல்போனை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டார். இதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் செல்போனுக்கு ஓ.டி.பி. வந்துள்ளது, அதில், வங்கிக் கணக்கிலிருந்து 12600 ரூபாய் பணம் திருடப்பட்டது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், இது குறித்து சைபர் க்ரைம் மோசடி எண் 1930க்கு புகார் தெரிவித்தார். அதே போல் பெரும்பாக்கம் காவல்நிலையத்திலும் மோசடி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளித்துள்ளார். வாகனங்களுக்கு அபராதம் செலுத்தும் குறுந்தகவல் லிங்க் போன்று அனுப்பி நூதன மோசடியில் ஈடுபடும் நபர்களை கண்டுபிடிக்க வேண்டும் என பணத்தை இழந்தவர் கோரிக்கை வைத்துள்ளார்.