நடிகர் காதல் சுகுமார் pt desk
தமிழ்நாடு

சென்னை | துணை நடிகை கொடுத்த பண மோசடி புகார் - நடிகர் காதல் சுகுமார் மீது வழக்குப் பதிவு

நடிகர் காதல் சுகுமார் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். துணை நடிகையை திருமணம் செய்து கொள்வதாக 7 லட்சம் ரூபாய் வரை மோசடி செய்த புகாரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

PT WEB

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

விருமாண்டி, காதல், வசூல் ராஜா உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் காதல் சுகுமார். இவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.7 லட்சம் வரை பணத்தை பெற்று மோசடி செய்துவிட்டதாக வடபழனியைச் சேர்ந்த துணை நடிகை கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக புகார் அளித்தார். கணவரை பிரிந்து தனியாக வாழ்ந்து வரும் அப்பெண்ணிடம் காதல் சுகுமார் மூன்று வருடங்களாக பழகி வந்ததாகக் கூறப்படுகிறது.

குறிப்பாக, அப்பெண்ணிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுக சிறுக சுமார் 7 லட்சம் பணத்தை பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும், தர்காவுக்கு அழைத்துச் சென்று அப்பெண்ணை திருமணம் செய்து கொள்வது போல் நடித்தும் உள்ளார். பின்னர், காதல் சுகுமார் ஏற்கனவே திருமணமானதை மறைத்து நாடகமாடியது அப்பெண்ணுக்கு தெரியவந்தது, இது குறித்து கேட்டபோது காதல் சுகுமார் அப்பெண்ணை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார்.

இதையடுத்து அந்தப் பெண் கொடுத்த பணத்தை காதல் சுகுமாரிடம் கேட்ட போது, செக் கொடுத்து மோசடி செய்துவிட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண் புகாரில் தெரிவித்துள்ளார். இதைத் தொடர்ந்து செக்கை கேட்டு வீட்டிற்கு வந்து தனக்கு கொலை மிரட்டல் விடுத்துச் சென்றதாகவும், இதனால் காதல் சுகுமார் மீது நடவடிக்கை எடுக்கும்படியும் மாம்பலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில், போலீசார் இரு தரப்பிடமும் விசாரணை மேற்கொண்ட நிலையில், காதல் சுகுமார் மீது மாம்பலம் அனைத்து மகளிர் போலீசார் பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மோசடி, பெண்ணை அவமதித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, அடுத்தக்கட்டமாக அவரை கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.