அண்ணாமலை எக்ஸ்
தமிழ்நாடு

சென்னை | 11ஆம் வகுப்பு மாணவனிடம் கஞ்சா பறிமுதல்.. அண்ணாமலை கவலை!

சென்னையில் 11ஆம் வகுப்பு பள்ளி மாணவனிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Premkumar S

தமிழ்நாட்டில், பள்ளி, கல்லூரிகளில் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகள் கலாசாரம் அதிகரித்து வருவதாக கூறப்படும் நிலையில், சென்னை வியாசர்பாடி உள்ள ஓர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக வந்த புகாரையடுத்து நேற்று, ஆசிரியர்கள் மாணவர்களை சோதனை செய்தனர். அப்போது, பதினோராம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனை சோதனை செய்தபோது, பேன்ட் பாக்கெட்டில் மாணவன் 5 கிராம் கஞ்சா பொட்டலம் மறைத்து வைத்தது தெரியவந்தது.

கஞ்சா

இதனையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியை ஹேமலதா எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் மாணவனைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது, பள்ளிக்கு வந்தபோது சாலையில் கிடந்ததாக மாணவன் தெரிவித்துள்ளான். ஆனால், ஏற்கெனவே கஞ்சா புகைக்கும் பழக்கம் மாணவனுக்கு இருந்தது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், பதினோரம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவனிடம் கஞ்சா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும், பள்ளி மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் நடமாட்டம் பள்ளி மாணவர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது.

இந்த நிலையில், “திமுக ஆட்சியில், கல்வி நிலையங்கள் கூட போதைப் பொருள்களின் புகலிடமாக மாறியிருப்பது, தமிழகத்திற்கே தலைகுனிவு. புத்தகம் வைத்திருக்க வேண்டிய கைகளில், கஞ்சா பொட்டலம் என்பது, வருங்கால சந்ததியினர் எதிர்காலம் குறித்த அச்சத்தையும், கவலையையும் ஏற்படுத்துகிறது” என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

அண்ணாமலை பேச்சு

இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ”கஞ்சா போதையில் நடைபெறும் குற்றங்கள், கடந்த நான்கு ஆண்டுகளில், மிகமிக அதிகரித்துள்ளன. சமீபத்தில், திருத்தணி ரயில் நிலையத்தில், கஞ்சா போதையில், ஒரு வடநாட்டு இளைஞரை, இளம் சிறுவர்கள் அரிவாளால் வெட்டிய காணொளியை பார்த்தோம். அதன் பிறகாவது, இந்தச் சொரணையற்ற திமுக அரசு, கஞ்சா வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால், கஞ்சா வியாபாரிகளுக்கும், கள்ளச் சாராய வியாபாரிகளுக்கும், போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் திமுகவில் பதவி கொடுத்து அழகு பார்க்கும் முதலமைச்சர் ஸ்டாலின், போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்துவார் என்று எதிர்பார்ப்பது தவறுதான்“ எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.