தமிழ்நாடு

20 மணிநேரத்திற்குப் பிறகு சரிசெய்யப்பட்ட மெட்ரோ ரயில் வழித்தட தொழில்நுட்பக் கோளாறு

webteam
மெட்ரோ ரயில் வழிதடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு, 20 மணி நேரத்திற்கு பிறகு, ஆறு பேர் கொண்ட குழுவால் சரி செய்யப்பட்டது. இன்று காலை முதல் அனைத்து மெட்ரோ ரயில்களும் வழக்கம்போல் இயங்கும் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஏற்பட்ட தொழிநுட்பக் கோளாறு காரணமாக, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து கோயம்பேடு வழியாக  விமான நிலையம் (பச்சை வழித்தடம்) வரையிலும் செல்லக்கூடிய மெட்ரோ ரயில் ஆலந்தோர் மெட்ரோ நிலையத்தோடு மட்டுமே இயக்கப்பட்டது, சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து விமான நிலையம் வரை பயணிக்கும் பயணிகள் ஆலந்தூரில் இறங்கி விம்கோ நகரில் இருந்து தேனாம்பேட்டை வழியாக விமான நிலையம் (நீல வழித்தடம்) வரையிலும் இயக்கப்படும் ரயிலில் மாற்றி பயணம்செய்ய அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
நேற்று காலை (peak hours)  நெரிசல் மிக நேரத்தில் இந்த பிரச்னை ஏற்பட்டதால் பள்ளி, கல்லூரி மற்றும் பணிகளுக்காக செல்லக்கூடிய பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் இரண்டு வழிதடத்திலும் ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டது. நேற்று காலை 8:30 மணியளவில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த மாற்று வழியை பயன்படுத்த அறிவுறுத்திய மெட்ரோ நிர்வாகம், தொழில்நுட்பக் கோளாறுகளை சரி செய்யும் பணிகளை 6 பேர் கொண்ட குழு தொடர்ந்து மேற்கொண்டது.
இரவும் நீடித்த இந்த பணியானது 20 மணி நேரத்திற்கு அதிகாலை 4 மணிக்கு மேலாக சரிசெய்யப்பட்டது. இந்நிலையில் இன்று காலை முதல் மெட்ரோவின் அனைத்து ரயில்களும் சீரான நேரத்தில் இரண்டு வழிதடத்திலும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.