சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் போது, மொபைலில் சத்தமாகப்பேசினால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என மெட்ரோ ரயில் நிறுவனம் எச்சரித்துள்ளது.
2002ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் இயக்கச்சட்டத்தின் கீழ், சக பயணிகளுக்கு இடையூறு விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும். குறிப்பாக, செல்போனில் உரத்த குரலில் பேசுவது, ஹெட்போன் இன்றி வீடியோ பார்ப்பது மற்றும் ஸ்பீக்கர் மோடில் பேசுவது போன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிகளை மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படுவதோடு, அவர்கள் மெட்ரோ வளாகத்தில் இருந்து வெளியேற்றப்படவும் வாய்ப்புள்ளது. எனவே, பயணத்தின் போது அமைதியைக் கடைபிடிக்குமாறும், ஹெட்போன்களைப் பயன்படுத்துமாறும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.