தமிழ்நாடு

“வட தமிழக கடற்கரையை புயல் நெருங்கும்” - வானிலை மையம் கணிப்பு

“வட தமிழக கடற்கரையை புயல் நெருங்கும்” - வானிலை மையம் கணிப்பு

webteam

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி வட தமிழக கடற்கரையை நெருங்கும் என வானிலை மையம் கணித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் ‘ஃபனி’ புயல் உருவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன், “நேற்று தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. அது வட தமிழகத்தின் கடற்கரை பகுதியில் இருந்து தென்கிழக்கே சுமார் 1500 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறக்கூடும். தற்போது உள்ள நிலவரப்படி ஃபனி புயல் ஏப்ரல் 30ஆம் தேதி வட தமிழக கடற்கரைக்கு அருகில் வரும். 

எனவே மீனவர்கள் ஏப்ரல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கும், 28 முதல் 30ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக வட தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து கண்காணித்துக் கொண்டே இருக்கிறோம். கோடை காலத்தை பொருத்தவரை இதற்கு முன்னர் 1966ஆம் ஆண்டு ஒரு புயல் கடலூர் அருகே கரையை கடந்திருக்கிறது.

2010 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் லைலா மற்றும் ரோனோ ஆகிய புயல்கள் கரைக்கு அருகே வந்தன. ஆனால் கரையை கடக்கவில்லை. அதன் மூலமாக மழை கிடைத்திருக்கிறது. ஒவ்வொரு புயலும் ஒரு விதமானது. காற்றழுத்த மண்டலத்தில் ஏற்படும் மாறுபாடுகளை பொருத்து புயலின் நகர்வு அமையும், அதை வைத்து நமக்கு காற்றோ அல்லது மழையோ கிடைக்கும் என்பதை அறிய முடியும். தற்போது தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் கடல்சீற்றம் இருக்கிறது” என்று தெரிவித்தார்.