பாலியல் வன்கொடுமை
பாலியல் வன்கொடுமை முகநூல்
தமிழ்நாடு

சித்தாள் வேலைக்குச் சென்ற பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்... கொலை செய்யவும் முயன்ற நபரை தேடும் போலீஸ்!

PT WEB

செய்தியாளர் - ஆனந்தன்

சென்னையை சேர்ந்த ஒரு பெண், தன் வீட்டில் பழுது பார்க்கும் பணிக்காக சந்துரு என்ற கட்டட மேஸ்திரியை அணுகியுள்ளார். இவர் நேற்று முன்தினம் சென்னை திருவொற்றியூரை சேர்ந்த வேல்முருகன் என்ற கொத்தனாரை அப்பெண்ணின் வீட்டிற்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். வேல்முருகனுடன், சென்னையை சேர்ந்த பெண் ஒருவரும் உதவிப்பணிக்காக சென்றுள்ளார்.

அங்கு சென்ற இருவரும் வேலை செய்து கொண்டிருந்த போது, அந்த வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வேல்முருகன், உதவிக்கு வந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அந்தப் பெண் தன்னை தற்காத்துக் கொள்ள முயன்றபோது ஆத்திரமடைந்த வேல்முருகன் தன் கையில் வைத்திருந்த சுத்தியலால் அப்பெண்ணின் தலையில் கொடூரமாகத் தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அப்பெண் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்துள்ளார்.

இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அங்குச் சென்று பார்த்த போது, உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழே விழுந்து கிடந்துள்ளார் அப்பெண். உடனடியாக அப்பெண்ணை அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வன்கொடுமை

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார், வேல்முருகனைத் தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.