வீடியோ காலில் மிரட்டிய போலி போலீஸ் அதிகாரி pt desk
தமிழ்நாடு

சென்னை: வீடியோ காலில் மிரட்டிய போலி போலீஸ் அதிகாரி - ஆதாரத்துடன் வழக்கறிஞர் புகார்

கொரட்டூரில் வழக்கறிஞரை டிஜிட்டல் அரெஸ்ட் செய்திருப்பதாகக் கூறி மும்பையில் இருந்து வீடியோ கால் மூலம் பேசிய போலி போலீஸ் கும்பல். ஆவடி காவல் ஆணையரக சைபர் கிரைமில் வீடியோ ஆதாரத்துடன் வழக்கறிஞர் புகார் அளித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

சென்னை கொரட்டூர் கேசவன் நாயக்கர் தெருவில் வசித்து வருபவர் வழக்கறிஞர் விவேக். இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார்.

இவரது தொலைபேசிக்கு சமீபத்தில் வந்த அழைப்பில், “Telecom Regulatory Authority India என்ற அரசு அமைப்பிலிருந்து பேசுகிறோம். உங்களின் ஆதார் அட்டை எண்ணை பயன்படுத்தி தொலைபேசி எண் பெற்று, அதன்மூலம் மும்பையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர்” எனக் கூறியுள்ளார் ஒருவர்.

ஆதாரத்துடன் வழக்கறிஞர் புகார்

தொடர்ந்து வீடியோ காலில் பேசிய காவல் அதிகாரி உடையணிந்த ஒருவர், தான் மும்பையிலிருந்து பேசுவதாக கூறி, விவேக் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், FIR NO MHO1451024 என்ற குற்ற எண் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறி அதுதொடர்பான புகைப்படத்தை அனுப்பி விவேக்கை மிரட்டியுள்ளார். மேலும் கனரா வங்கியில் ஒரு கணக்கு மும்பையில் உள்ளதாக கூறி விவேக்கை மிரட்டும் தொனியில் பேசி உள்ளனர்.

இதுகுறித்து தன் புகாரில் குறிப்பிட்டுள்ள விவேக், “காவல் உடையில் இருந்த அதிகாரி, என்னை உடனடியாக கைது செய்யப் போவதாக மிரட்டி தொலைபேசியை துண்டிக்காமல் இருக்குமாறு கூறி வங்கி கணக்குகளை ஆராய வேண்டும் என்றார். நான் வங்கி ஆவணங்களை தர மறுத்ததை அடுத்து சிறிது நேரத்தில் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

Cyber crime

இது போன்ற தொலைபேசி அழைப்புகள் அடிக்கடி வருவதால் மிகுந்த அச்சமும் மன உளைச்சலும் ஏற்பட்டுள்ளது. எனவே புகாரை பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுக்கவும்” என கேட்டுக் கொண்டுள்ளார். இவை அனைத்தையும் வீடியோவாக பதிவுசெய்து, அந்த ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார் விவேக். அதன்பேரில் ஆவடி காவல் ஆணையராக சைபர் குற்ற பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.