தமிழ்நாடு

சென்னை: விசா விதிகளை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட ருமேனியா நாட்டவரிடம் விசாரணை

kaleelrahman

விசா விதிமுறையை மீறி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக ருமேனியா நாட்டைச் சேர்ந்தவரிடம் குடியுரிமை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ருமேனிய நாட்டைச் சேர்ந்த நிகொய்டா தொழில் நிமித்தமாக பிசினஸ் விசாவில் கோவைக்கு வந்துள்ளார். இந்நிலையில் பேருந்தில் பயணிக்கும்போது பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்துப்பயணம் என்பதை அறிந்து நிகொய்டா ஆச்சரியமடைந்தார்.

தமிழக அரசின் இந்த திட்டத்தால் ஈர்க்கப்பட்டு திமுகவிற்கு ஆதரவாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டதாக நிகொய்டா தெரிவித்தார் .இவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இது சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

இதையடுத்து விசா விதிமுறையை மீறி நிகொய்டா செயல்பட்டதாகவும் அதற்குரிய விளக்கத்தை அளிக்கும்படி குடியுரிமை அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தனர். அதன்படி இன்று மதியம் 12.10 மணியளவில் சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள குடியுரிமை அலுவலகத்தில் விசாரணைக்காக நிகொய்டா ஆஜரானார். அவர் ஆஜராவதை அறிந்து ஊடகங்கள் அங்கு காத்திருந்தனர்.

அப்போது கார் ஒன்றில் தொப்பி அணிந்தபடி நிகொய்டா அவசர அவசரமாக குடியுரிமை அலுவலகத்திற்குள் சென்றார். விசா விதிமுறையை மீறியது தொடர்பாக விசாரணைக்கு அவர் ஆஜரானார். குறிப்பாக தொழில் செய்வதற்காக பிசினஸ் விசாவில் வந்த நிகொய்டா, விசா விதிமுறைகளை மீறி அரசியல் நடவடிக்கையில் ஈடுபட்டது தொடர்பாக குடியுரிமை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் அடிப்படையில் அடுத்தக்கட்டமாக ருமேனியா நாட்டை சேர்ந்த நிகொய்டாவின், விசாவை ரத்து செய்து ருமேனியாவிற்கு திருப்பி அனுப்ப வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.