தமிழ்நாடு

திசை மாறும் அசானி புயல் - 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சங்கீதா

அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா - ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக தமிழகத்தில் நாளை 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நிலைக் கொண்டுள்ள அசானி புயல், ஒடிசா மற்றும் மேற்கு வங்க கடற்கரையை கடக்காமல் மீண்டும் கடலை நோக்கி திரும்பும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், அசானி புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை வட ஆந்திரா - ஒடிசா கடற்கரை ஒட்டிய மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில், சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது. மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.