தமிழ்நாடு

மோசமான சாலைக்கு ‘ஏன் 50% சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது?’ - உயர்நீதிமன்றம் கேள்வி

webteam

சென்னை மதுரவாயல் - வாலாஜாபேட்டை வரையிலான சாலையில் ஏன் 50 சதவீத சுங்கக்கட்டணத்தை மட்டும் வசூலிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையிலான தேசிய நெடுஞ்சாலை மிக மோசமாக இருப்பதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சத்தியநாராயணன், தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதனடிப்படையில், சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. அதில், சாலை பராமரிப்பு தொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துறை, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம், தமிழக நெடுஞ்சாலை துறை ஆகியவை டிசம்பர் 9-ஆம் தேதிக்குள் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மதுரவாயல் முதல் வாலாஜாபேட்டை வரையுள்ள சாலையை முறையாக அமைக்கும் வரை 50 சதவீத சுங்கக்கட்டணத்தை மட்டும் ஏன் வசூலிக்கக்கூடாது என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், சென்னையில் முக்கிய பிரமுகர்கள் செல்லும் சாலைகளும் மோசமாகவே இருப்பதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.