தமிழ்நாடு

தீர்ப்பு வரவேற்கத்தக்கது- கவுசல்யா தாயார் பேட்டி

Rasus

உடுமலை சங்கர் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என கவுசல்யாவின் தாயார் அன்னலெட்சுமி தெரிவித்துள்ளார்.

உடுமலை சங்கர் கொலை தொடர்பாக ஏற்கெனவே தீர்ப்பு வழங்கிய திருப்பூர் நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனை விதித்தது. தாய் அன்னலட்சுமி, தாய்மாமன் பாண்டித்துரை, உறவினர் பிரசன்னகுமார் ஆகிய 3 பேரை விடுதலை செய்தும் தீர்ப்பளித்திருந்தது. அத்துடன் ஒருவருக்கு ஆயுள் தண்டனையும், மற்றொருவருக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டது.

தீர்ப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன்படி இன்று தீர்ப்பு வழங்கிய உயர்நீதிமன்றம், கவுசல்யாவின் தந்தையை விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது. கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையையும் சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல், ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் உடுமலை சங்கர் கொலை வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்கது என கவுசல்யாவின் தாயார் அன்னலெட்சுமி தெரிவித்துள்ளார். நாங்க யாருக்கும், எதுவும் செய்யல.. அதனால் கடவுளா பார்த்து கொடுத்த தீர்ப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.