தமிழ்நாடு

கஜா புயல் இழப்பீடு விவகாரம்.. மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

webteam

கஜா புயல் காரணமாக ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மதிப்பீடு செய்து உரிய இழப்பீடு வழங்க கோரிய மனுவுக்கு பதிலளிக்கும் படி, மத்திய - மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் கஜா புயலால் ஏற்பட்ட சேதங்களை முழுமையாக மதிப்பீடு செய்யக் கோரி வெள்ளைச்சாமி என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொது நல மனுத்தாக்கல் செய்துள்ளார். புயல் காரணமாக தஞ்சையில் 83 கிராமங்களும், புதுக்கோட்டையில் 43 கிராமங்களும், நாகையில் 87 கிராமங்களும் பெருத்த சேதத்தை சந்தித்துள்ளன என மனுவில் அவர் கூறியுள்ளார். இக்கிராமங்களில் 2 லட்சம் தென்னை மரங்கள் விழுந்து விட்டதாகவும், ஹெக்டேருக்கு 2.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளதாகவும், அது போதுமானதல்ல எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிவாரண உதவிகள் சென்றுசேராத கிராமங்களுக்கு உடனடியாக அவற்றை வழங்க உத்தரவிட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். இதை விசாரித்த நீதிபதிகள் , மத்திய, மாநில அரசுகள் நவம்பர் 29-ஆம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர். புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை பேரிடர் பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரி வழக்கறிஞர் ரஜினிகாந்த் ஏற்கனவே தொடர்ந்த வழக்குடன் இணைத்து இந்த மனு விசாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.