தமிழ்நாடு

பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அகற்றுவதில் தவறில்லை : சென்னை உயர் நீதிமன்றம்

Sinekadhara

சென்னையை அடுத்த ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கையில் தவறில்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஈஞ்சம்பாக்கம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்து உருவாக்கப்பட்ட பெத்தேல் நகரில் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றுவது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கும், பெத்தேல் நகர் குடியிருப்போர் பாதுக்காப்பு நலசங்கம் மற்றும் குடியிருப்புவாசிகள் தொடர்ந்த வழக்குகளும் பொறுப்புத் தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டு வருகிறது. அதில் குடியிருப்போரின் விவரங்களை அரசுக்கு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம், பின்னர் அவற்றை தொகுத்து பட்டியலாக தாக்கல்செய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

இதற்கிடையில், மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை வகைமாற்றம் செய்து நத்தம் புறம்போக்கு நிலமாக மாற்றி காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளதால், அதன்படி பட்டா வழங்கக்கோரி பெத்தேல் நகர் குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மாவட்ட ஆட்சியர் பரிந்துரை மட்டுமே செய்யமுடியும் எனவும், அந்த நிலத்தின் தன்மையை வகைமாற்றம் செய்ய நில நிர்வாக ஆணையருக்குத்தான் அதிகாரம் உள்ளதாக விளக்கம் அளித்தனர். அதன்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசின் நடவடிக்கையில் தவறில்லை என சுட்டிக்காட்டினர்.

அப்போது பெத்தேல் நகர் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுத்துவருவதாக அரசு சார்பில் தெரிவித்தபோது, நீதிபதிகள் குறுக்கிட்டு தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, இத்தனை ஆண்டுகளாக ஏன் அனுமதித்தது என்றும் கேள்வி எழுப்பி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.