மாற்றுத்திறனாளி - உயர்நீதிமன்றம் web
தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல்.. நீதிமன்றம் கண்டனம்!

தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக போராடிய மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறையினர் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

PT WEB

சென்னை உயர் நீதிமன்றத்தில் மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறையினர் தாக்குதல் குறித்து வழக்கு தொடரப்பட்டது. போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் மீது காவல்துறையினர் கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. நீதிபதி நிர்மல் குமார் காவல்துறையின் செயல்பாடுகளை கண்டித்து, உரிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா. ஜான்சிராணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

மனுவில் தமிழகம் முழுவதும் இருந்து ஏறத்தாழ 1800 மாற்று திறனாளிகள் கடந்த பிப்ரவரி 17-ம் தேதியன்று சென்னை சேப்பாக்கம் சிவானந்த சாலையில் அமைதியாக கூடி மாற்று திறனாளிகளின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தியதாக குறிப்பிட்டுள்ளார். 

மாற்றுத்திறனாளிகள்

எழும்பூர் காவல்துறை உதவி ஆணையர் ஜெகதீசன் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோர் தலைமையில் போலீசார் போராட்ட காரர்களை ராஜரத்தினம் ஸ்டேடியத்திற்கு சென்று அமர்ந்து போராடும் படி கேட்டுக்கொண்டதால் அங்கு சென்றாதாகவும், அதன் பிறகு இரவு எட்டு மணிக்கு போலீசார் போராடிய மாற்று திறனாளிகளை திருமங்கலத்தில் உள்ள பெரியார் திருமண கூடத்தில் தங்க வைப்பதாக கூறி அனைவரையும் 20 க்கும் மேற்பட்ட பேருந்துகளில் ஏற்றிச்சென்றதாக தெரிவித்துள்ளார்..

ஆனால் சென்னை மற்றும் சென்னைக்கு அருகே பல இடங்களில் எந்த வித அடிப்படை உதவியும் செய்யாமல் அழைக்கழித்ததோடு, அவர்களை அடித்து சித்ரவதை செய்துள்ளதாகவும், மேலும் மனுதாரர் கால்களை இழந்த மாற்றுத்திறனாளி ஜான்சி அவர்களை பேருந்தில் தூக்கி போட்டு, அவர் கைகால்களை முறுக்கி, அதனால் மயக்கமுற்ற அவரை மருத்துவ மனையில் கூட சேர்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.

பின்னர் அங்கிருந்தவர்களின் உதவியுடன் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவ மனையில் அவசர பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றதாகவும் தெரிவித்துள்ளார். எனவே மாற்று திறனாளிகள் மீது கொடுமை நிகழ்த்திய போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இழப்பீடாக 25 லட்சம் வழங்க உத்தரவிடவேண்டும் என மனுவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

காவல்துறை

மேலும் எழும்பூர் உதவி ஆணையர் ஜெகதீசன் மற்றும் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளார். 

இந்த வழக்கு நீதிபதி நிர்மல் குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை மீதான குற்றச்சாட்டு மிக தீவிரமானது என கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து உரிய பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை அடுத்தமாதம் 21-ஆம் தேதி ஒத்திவைத்துள்ளார்.